100 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டால் பரபரப்பு

திருச்சி அருகே போலீஸ் தடையை மீறி 100 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு நேற்று நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் தை மாதம் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும். முன்னதாக மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சில ஊர்களில் பயிற்சி ஜல்லிக்கட்டு நடைபெறும். அதன்படி திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரியசூரியூரில் நேற்று பயிற்சி ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக பெரிய சூரியூர், சின்ன சூரியூர், நவல்பட்டு உள்ளிட்ட சுற்று கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. இதுபற்றி அறிந்த நவல்பட்டு போலீசார் சென்று ஊர் பிரமுகர்களிடம் பேச்சு நடத்தினர். முறையான அனுமதி பெற்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். எனவே ஜல்லிக்கட்டை நிறுத்தும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு ஊர் பிரமுகர்கள் மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து தொழுவத்தில் இருந்து வரிசையாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கூறியது: மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் பெரிய ஜல்லிக்கட்டுக்கு தான் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவோம் என்று கூறி ஊர் பிரமுகர்கள் ஜல்லிக்கட்டை நிறுத்த மறுத்துவிட்டனர்.

போதிய போலீசார் இல்லாததால் ஜல்லிக்கட்டை தடுக்க முடியவில்லை. எனினும் ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை கண்டித்துள்ளேன் என்றார்.கூத்தைப்பாரில் என்ற ஊரிலும் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற இருந்தது. தகவலறிந்த திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தினர்.

0 comments: