பூந்தமல்லி இரட்டை கொலை வழக்கில் முக்கிய ரவுடி உட்பட நான்கு பேர் கைது

பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்த போது பிரபல ரவுடி சின்னா மற்றும் அவரது வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்ற வாளியான பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மூவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:


சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந் தவர் சின்னா(41). பிரபல ரவுடியான இவர், கடந்த மாதம் 30ம் தேதி வெடிகுண்டு வீசிய வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பூந்தமல்லி கோர்ட்டிற்கு வந்தார். மதிய உணவு அருந்துவதற்காக தனது வக்கீலுடன் குமணன்சாவடி சென்ற சின்னாவை, 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஜூனியர் வக்கீல் பகவத் சிங்கும் இறந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கடந்த 6ம் தேதி கூலிப் படையைச் சேர்ந்த நான்கு பேரையும், 8ம் தேதி இருவரையும் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா மற்றும் கூலிப்படையினர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.


கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவான ரவுடிகள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆற்காடு சுரேஷ், தனது கூட்டாளிகளுடன் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு விரைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கொலைக்கு பயன் படுத்திய டாடா சுமோ காரில் (டி.என்.01, கே.4147) வந்த ஆற்காடு சுரேஷ்(32), உதயகுமார்(23), குபேந்திரன்(23), ஜெயராமன்(24) ஆகிய நால்வரையும் குயின்ஸ்லாண்டு எதிரே போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடம் இருந்த பட்டா கத்தி, அரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீசிங் ராஜா உட்பட சிலரை மட்டுமே இன்னும் கைது செய்ய வேண்டும். அவர்களும் விரைவில் சிக்குவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

0 comments: