தீபாவளிக்கு அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு துவக்கம்

தீபாவளிக்கு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு பஸ்களில், 30 நாட்களுக்கு முன்னரே பதிவு செய்யப்படுகிறது. தென் மாவட்டங்களுக்கான முன்பதிவு, அக்., 3ம் தேதி முதல் துவங்கவுள்ளது.ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்வோர் அனைவரும், அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நம்பியுள்ளனர்.

ஆம்னி பஸ்களில் இஷ்டம் போல் டிக்கெட் கட்டணம் வசூலிப்பதால், நடுத்தர மக்கள் அனைவரும் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 30 நாட்களுக்கு முன், முன்பதிவு செய்து கொள்ளும் வசதியுள்ளது. அதன் அடிப்படையில் தீபாவளிக்கு பண்டிகைக்கு முன்கூட்டியே வெளியூர் செல்பவர்கள், பயணம் செய்யப்போகும் நாளில் இருந்து 30 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து கொள்ளலாம்.மேலும், அக்., 3ம் தேதி முதல் தீபாவளி முன்பதிவு துவங்குவதாக, முன்பதிவு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கோயம்பேடு, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் 456 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 80க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்கவுள்ளனர். மேலும், விழுப்புரம், மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிறப்பு பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த மாதங்களில் அடுத்தடுத்து கிடைத்த அரசு விடுமுறை நாட்களில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு, கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி செய்து கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.ஆகையால், மற்ற கோட்டங்களில் இருந்து அதிகளவிலான கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, நவம்பர் 2, 3 மற்றும் 4 ஆகிய மூன்று நாட்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை சமாளிக்க, முன்கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

0 comments: