காதலனை தீ வைத்து எரித்த 8ம் வகுப்பு மாணவி

திருத்துறைப்பூண்டி அருகே காதலனை எட்டாவது வகுப்பு மாணவி தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தமங்கலம் ஏரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சத்யா (13). 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

பல்லம்கோவில் கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (28). இவர் ஒரு புரோட்டா மாஸ்டர். இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

ஆனால் சமீப காலமாக ராமதாஸின் செயல்பாடுகள் பிடிக்காததால், அவரிடமிருந்து விலகத் தொடங்கினார் சத்யா. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ராமதாஸ்.

சத்யாவை சந்திக்க அவரது வீட்டுக்குப் போனார். வீட்டில் யாரும் இல்லை, சத்யா மட்டும் இருந்தார். அவரிடம், என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்னை எதற்காக வெறுத்து ஒதுக்குகிறாய். நீ இல்லாவிட்டால் என்னால் வாழ முடியாது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

ஆனால் கோபப்பட்ட சத்யா, முதலில் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் வேதனை அடைந்த ராமதாஸ் தீக்குளித்து விட்டார்.

இதுவரை நடந்தது முதலில் போலீஸார் தரப்பில் கூறப்பட்ட தகவல். ஆனால் சத்யாவை தற்போது விசாரித்துள்ள போலீஸார், ராமதாஸ் தானாக தீக்குளிக்கவில்லை, சத்யாதான் அவரை எரித்து விட்டார் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பலத்த தீக்காயத்துடன், தஞ்சை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வரும் ராமதாஸ், மாஜிஸ்திரேட் வனிதாவிடம் இதுகுறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், சத்யா வீட்டுக்கு சென்று திருமணம் செய்ய வற்புறுத்தினேன். இல்லா விட்டால் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்வதாக கூறி உடலில் மண்ணெண்ணையை ஊற்றி மிரட்டினேன். ஆனால் அதற்குள் சத்யா நீ உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று கூறி என் மீது தீ வைத்து விடடார் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருத்துறைப் பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், சப்-இன்ஸ்பெக்டர் முரளி, ஏட்டுகள் ரவி, குணா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காதலனை உயிரோடு எரித்த சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: