இன்று பஸ்கள் வழக்கம் போல் இயங்கும்: போலீஸ் கமிஷனர்

இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில், பஸ்கள் வழக்கம் போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடைகளை மூட வலியுறுத்துவோர் கைது செய்யப்படுவார்கள்,'' என்று கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு நிருபர்களிடம் கூறியதாவது:நாளை (இன்று) நடைபெறும் வேலை நிறுத்தத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. அதற்கேற்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


நகரின் எந்த பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஏராளமான ரோந்து வாகனங்கள் இயக்கப்படும். இரண்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பால் வண்டி, ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், அரசு, தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்க தக்க பாதுகாப்பு வழங்கப்படும். பஸ்களை ஓட விடாமல் தடுப்பவர்கள், கடைகளை அடைக்க வலியுறுத்துபவர்கள் என, நகரின் மொத்த இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் கைது செய்யப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments: