தங்கசாலை மேம்பாலம் 15 மாதத்தில் கட்டப்படும்: மேயர் உறுதி

'தங்கசாலை மேம்பாலப்பணிகள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் துவங்கி 15 மாத காலத்தில் கட்டி முடிக்கப்படும்' என, மேயர் சுப்ரமணியம் கூறினார்.சென்னை தங்கசாலை மணிகூண்டு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, 23 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பணிகளை நேற்று மேயர் சுப்ரமணியம் ஆய்வு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: வடசென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் தங்க சாலை சந்திப்பில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்டப்படும் என துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2007-2008ம் ஆண்டு, சட்டசபை மானிய கோரிக்கையின் போது அறிவித்தார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்து, பேசின் மேம்பால சந்திப்புவரை சென்று அவர் ஆய்வு செய்தார். அங்கு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 35 மரக்கடைகளை வியாபாரிகள் வைத்திருந் தனர்.


மேம்பாலம் கட்டுவதற்கு வசதியாக, மரக்கடை வியாபாரிகள் கையகப்படுத்தியிருந்த 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 22.50 கிரவுண்ட் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது.பழைய சிறைச்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை, போலீஸ், மருத்துவத்துறைக்கு சொந்தமான நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.தங்க சாலை மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் விடுவதற்காக, இம்மாதம் 24ம் தேதி நடக்கவுள்ள மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.


மேம்பாலப்பணிகள் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் துவங்கி, 15 மாத காலத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வடசென்னையிலேயே பெரிதானது என கூறும் வகையில் 23 கோடி ரூபாய் செலவில் 520 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டப்படும். ஸ்டான்லி மருத்துவமனையில் துவங்கி பேசின்பாலம் சாலையை இணைக்கும் வகையில் இந்த மேம்பால வடிவமைப்பு இருக்கும்.இவ்வாறு மேயர் கூறினார்.


அதன்பின்,மேம்பாலம் அமையவுள்ள இடத்தை ஒட்டி அரசு அச்சக சுவர் ஒரம் உள்ள குடிசைகளை கணக்கெடுத்து, அங்கு வசிப்பவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவும் மேயர் சுப்ரமணியம், துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். புரசைவாக்கம் எம்.எல்.ஏ., பாபு, மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜய குமார், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

0 comments: