பட்டுக்கோட்டை மாணவர் பாரதிராஜா மாவட்டத்தில் முதலிடம்

தியானத்தால் லட்சியத்தை அடைந்தேன் என்று பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி மாணவர் பாரதிராஜா கூறினார்.பட்டுக்கோட்டை பள்ளிகொண்டான் லாரால் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் பாரதிராஜா தமிழில் 193, ஆங்கிலத்தில் 188, இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் தலா 199, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் தலா 200 என்று மொத்தமாக ஆயிரத்து 179 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.\

இந்த மாணவர் 10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் 2ம் இடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இவர் பட்டுக்கோட்டை ஆர்.வி நகரில் வசிக்கிறார்.இவரது தந்தை பழனிவேலு வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். தாய் சாரதா காதர்மொய்தீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.தனது சாதனை குறித்து மாணவர் பாரதிராஜா கூறியதாவது:


10ம் வகுப்பில் படைத்த சாதனையை விட பிளஸ் 2 தேர்வில் கூடுதல் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக பெற்றோர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி வந்தேன். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்குவது இல்லை. தினமும் தியானம் செய்து வந்தேன். எனது லட்சியத்தை அடைய தியானம் முழுமையாக உதவியது. எதிர்காலத்தில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


மாணவி பவித்ரா மாவட்டத்தில் 2ம் இடம்: பட்டுக்கோட்டை புனித இசபெல்லா பள்ளியில் படித்தவர் பவித்ரா. இவர் பிளஸ் 2 தேர்வில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடத்தில் 191, இயற்பியலில் 198, வேதியியலில் 200, உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் 199 என்று மொத்தம் ஆயிரத்து 178 மதிப்பெண் பெற்று தஞ்சை வருவாய் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.


இவரது தாய் சித்ரா பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இவரது தந்தை வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்டார். இதனால் பவித்ரா தனது சித்தி விமலாவுடன் வசித்து வருகிறார். பவித்ராவின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


சாதனை குறித்து மாணவி பவித்ரா கூறியதாவது:நான் சிறு வயது முதல் நன்றாக படிப்பேன். எனது தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக இரவு, பகல் என்று பார்க்காமல் படித்து வந்ததால் லட்சியத்தை அடைய முடிந்தது. தாய் இறந்த பின்னர் தாத்தா, பாட்டி, சித்தி ஆகியோர் எனது படிப்புக்கு முழு ஊக்கம் கொடுத்தனர். தலைமை ஆசிரியர் முதல், வகுப்பு ஆசிரியர் வரை கொடுத்த ஊக்கம் நான் மாவட்ட அளவில் இடம் பெற உதவியது.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியாரை ரோல்மாடலாக கொண்டு ஏழைகளுக்கு சேவை செய்ய உள்ளேன். இதற்காக எதிர்காலத்தில் டாக்டர் படிப்பை தேர்வு செய்து படிக்க இருக்கிறேன். இவ்வாறு மாணவி பவித்ரா கூறினார்.


மாணவி ஜனனி மாவட்டத்தில் 3ம் இடம்: பட்டுக்கோட்டை இசபெல்லா மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி தமிழில் 183, ஆங்கிலத்தில் 192, இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200, கம்ப்யூட்டர் அறிவியலில் 197 என்று மொத்தம் ஆயிரத்து 172 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.இவரது தந்தை மதுக்கூர் இந்தியன் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.


தாய் சொர்ணலதா குடும்ப பெண்மணி. ஜனனி 6ம் வகுப்பு முதல் எல்லா தேர்வுகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளார். நான் பிளஸ் 2 தேர்வில் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் டி.வி, போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் தருவதை தவிர்த்தனர். இதனால் நான் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. எனது பெற்றோரின் தியாகம் மாவட்ட அளவில் இடம் பெற முடிந்தது.நான் எதிர்காலத்தில் இன்ஜினியர் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.சாதனை படைத்த மாணவி ஜனனியை தலைமை ஆசிரியர் ஜெயராணி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இமானுவேல்ராஜ், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் பாராட்டினார்.


மாவட்ட அளவில் மாணவிராகிலாபர்வீன் 3ம் இடம்தஞ்சை ஆக்ஸீலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ராகிலாபர்வீன் தமிழில் 191, ஆங்கிலம் 189, இயற்பியல் 195, வேதியியல் 199, கம்ப்யூட்டர் அறிவியல் 198, கணிதம் 200 என்று ஆயிரத்து 172 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்றார். இவரது தந்தை முகமது இஸ்மாயில், தாய் பரிதாபேகம்.


நான் பிளஸ் 1 தேர்வில் மாவட்ட அளவில் இடம் பிடித்துள்ளேன். அதே போல் பிளஸ் 2 தேர்வில் இடம் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்ததால் சாதனை படைக்க முடிந்தது. எதிர்காலத்தில் பொறியாளர் ஆவதே எனது லட்சியம் என மாணவி ராகிலாபர்வீன் கூறினார்.

0 comments: