ரோகித் சர்மா துணிச்சல் ஆட்டம் : இந்தியா போராடி தோல்வி

ஒன்மேன் ஆர்மியாக ரோகித் சர்மா துணிச்சலுடன் போராட, ஆஸி.,க்கெதிரான உலக கோப்பை டுவென்டி-20 சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. 3வது உலக கோப்பை டுவென்டி-20 போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், சூப்பர் 8 ஆட்டங்கள் நடந்து வருகின்றன. பார்படாசில் நடந்த சூப்பர் 8 போட்டி ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்தியா, ஆஸி.,யை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார்.


இதையடுத்து ஆஸி., அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், வார்னரும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே அடித்து ஆட ஆரம்பித்த அந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியினர் எடுத்த முயற்சி வீணானது. பந்துவீச்சுக்கு சாதகமானது என்று கருதப்பட்ட மைதானத்தில் அந்த ஜோடியின் ஆட்டம் இந்திய வீரர்களை திகைக்க வைத்தது. முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களை குவித்த அந்த ஜோடியை பதான் பிரித்தார். வாட்சன் 54 ரன்களையும், வார்னர் 72 ரன்களையும் எடுத்து ஆஸி., அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து ஹாடின் 8 ரன்களுக்கும், ஹசி 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸி., நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் நெஹ்ரா மற்றும் யுவராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.


185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியினருக்கு ஏனோ இன்று மைதானத்தில் நிற்கவே பிடிக்க வி‌ல்லை போலும். விஜய் 2, காம்பிர் 9, ரெய்னா 5, யுவராஜ் 1, தோனி 2, பதான் 1, ஜடேஜா 4 என ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி வெகுவிரைவாக பெவிலியன் திரும்பினர். இறுதியில் ரோகித் சர்மா மட்டும் துணிச்சலுடன் விளையாடினார். ஆஸி., பந்து வீச்சை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் சிதறடித்த அவர், 46 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். இறுதியில் இந்திய அணி, 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

0 comments: