செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்

மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை.
இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று சமரசம் செய்தனர். அந்த வாலிபரை கண்டிக்காமல் சென்றுவிட்டனர்.

சக பயணிகளும் யாரும் அந்த பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனால் தைரியமான அந்த வாலிபர் மீண்டும் சில் மிஷத்தில் ஈடுபட்டார்.
அதோடு அந்த பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டவும் செய்தார். பதிலுக்கு அந்த பெண்களும் திட்டினார்கள். அந்த வாலிபரிடம் நீ பேசியது தப்பு என்று மன்னிப்புக் கேள் என்றனர்.

திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதோடு அந்த பெண்களை மேலும் இழிவாகப் பேசினார். இது அந்த பெண்களை கொதித்தெழ வைத்தது. அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
வாலிபரை அவர்கள் சூழ்ந்து கொண்டு துவைத்து எடுத்தனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து அந்த வாலிபரை தாக்கினார்கள்.

“ஜெய்ப்பூரில் விமானம் இறங்கியதும் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்” என்று அந்த வாலிபர் மீசையை முறுக்கினார். அதற்கும் அந்த பெண்கள் பயப்படாமல் அடித்து உதைத்தனர்.
ஜெய்ப்பூரில் விமானம் தரை இறங்கிய பிறகும் அந்த பெண்களுக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு நீடித்தது. அந்த வாலிபர் மீது பெண்கள் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த பெண்கள் புகாரை வாபஸ் பெற்றதால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.

0 comments: