மத்திய புலனாய்வுக் கழகத்தைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்புப் போராட்டம்

சோபியானில் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட பெண்கள் குறித்து விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுக் கழகம், அவர்கள் கால்வாயில் மூழ்கித்தான் உயிரிழந்தார்கள் என்று அறிக்கை அளித்ததைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காஷ்மீரை உலுக்கிய சோபியான் கடத்தல், கற்பழிப்பு, கொலை குறித்து விசாரணை நடத்திய ம.பு.க., கால்வாயில் இருந்து பிணங்களாக மீட்கப்பட்ட அந்த இரண்டு பெண்களும் கற்பழிக்கப்பட்டதற்கோ அல்லது கொலை செய்யப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது மட்டுமின்றி, அவர்களின் உடல் பரிசோதனை செய்த மருத்துவர்கள் 6 பேர், வழக்கறிஞர்கள் 5 பேர் உட்பட 13 பேர் மீதும் தவறான ஆதரங்களை அளித்ததாகக் கூறி அறிக்கை தாக்கல் செய்தது.


குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தி அறிக்கை தயாரித்துள்ளது ம.பு.க. என்று கூறி மஜ்லிஸ் இ முஷாவராத் என்ற அமைப்பு, ம.பு.க.வை கண்டித்து முழு அடைப்பு நடத்துமாறு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இன்று காஷ்மீரில் பரவலாக முழு அடைப்பு நடைபெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.


ஹூரியாத் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments: