அனைத்து திருமணங்களுக்கும் பதிவு அவசியம்

கடந்த நவ. 24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் அவசியம் பதிவு செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்டப் பதிவாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்து திருமணங்கள் சட்டம், இந்திய, கிறிஸ்துவ திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம், முகமதியர்கள் ஷரியத்திருமண சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும் தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த திருமணங்கள் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணம் நடைபெற்ற எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். திருமணப் பதிவிற்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தை எந்தவித விடுதல் அல்லது பிழை இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட முகவரி, வயது தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றுடன் ரூபாய் 100 கட்ட ணத்தை செலுத்தி திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


இந்த விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் சரியாக இருந்தால் சம்பந்தப்பட்ட திருமணப்பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் சரியான தகவல்கள் தராத அல்லது உரிய ஆவணங்கள் இணைக்கபடவில்லை என்றால் திருமணப் பதிவாளர் குறைகளை சரி செய்து மனுதாரருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திருமணப் பதிவு விதிகளின் படி திருமணம் நடக்கவில்லை என்று திருமணப்பதிவாளரால் உணர்ந்தால் அந்த மனுவும் திருப்பி அனுப்பி வைக்கப்படும். இந்த மறுப்பு ஆணை மீது சம்பந்தப்பட்ட மனுதாரர் ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்டப் பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளரால் பிறப்பிக்கப்படும் உத்தரவு திருப்தி இல்லை என்றால் உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத்துறை தலைவருக்கு மேல் முறையீடு செய்யலாம். பதிவுத்துறை தலைவரின் ஆணையே இறுதியானது ஆகும்.


எனவே கடந்த நவ.24ம்தேதி முதல் நடந்த அனைத்து திருமணங்களையும் எந்தவித ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்யாத அல்லது வீதிமீறல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும். திருமணப்பதிவு தொடர்பான விவரங்கள் அனைத்து பதிவு அலுவலகங்கள், மாவட்ட, துணைப் பதிவு அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளம் www tnreginert.net தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 comments: