சென்னையில் மிரிண்டா விற்பனைக்கு தடை

மிரிண்டா உள்ளிட்ட பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் நிறுவனத்தின் குளிர்பானங்களை சென்னையில் விற்க, சென்னை மாவட்ட நுகர்வோர் கோர்ட் தடைவிதித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் சித்ரவேல். மதுராந்தகம் அருகில் உள்ள மாமண்டூரில் இயங்கிவரும் "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மற்றும் இந்நிறுவனத்தின் குளிர்பானத்தை விற்றவர்களுக்கு எதிராக, இவர் தாக்கல் செய்த மனு: வடக்கு துறைமுக சாலையில் உள்ள சரவணா கூல் பாரில், கடந்த செப்டம்பர் 1 ம் தேதி, 600 மி.லி., "மிரிண்டா' குளிர்பானத்தை வாங்கினேன்.

பாட்டிலை திறந்தபோது, அதில் பூச்சியும், கருப்புநிற தூசு துகள்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல் பட்டுள்ளனர்.

இச்செயல் சேவை குறைப்பாட்டோடு, பொது சுகாதாரத்திற்கு எதிரான குற்றம்.
மாமண்டூரில் உள்ள, "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவன குளிர்பான தயாரிப்புகளை விற்க தடைவிதிக்க வேண்டும்.

சென்னை, மைசூர் மற்றும் காசியாபாத்தில் உள்ள, அரசு உணவு பரிசோதனை மையங்கள் ஆய்வுசெய்து, அறிக்கை தரவேண்டும்.

மாசுகலந்த தயாரிப்பை விற்றதால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடாக தர வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கில் எதிர்மனுதாரர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. புகார் மனுவை, சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் கோர்ட் நீதிபதி மோகன்தாஸ், உறுப்பினர்கள் கமலகண்ணன், ஷீலா, விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். மாமண்டூரில் இயங்கிவரும், "பெப்சிகோ இந்தியா ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் குளிர் பானங்களை சென்னையில் விற்க, சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் கோர்ட் இடைக்கால தடைவிதித்தது.

0 comments: