திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக புகார் வந்துள்ளதையடுத்து அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய அரங்கங்களில் மக்களுக்கு பணம் வேஷ்டி, சேலை போன்ற பரிசு பொருட்கள், உணவு வினியோகம் செய்யப்படுவதாக கடந்த தேர்தலின் போது நிறைய புகார் வந்தது.இதை ஆரம்பத்திலேயே தடுக்க ஒவ்வொரு திருமண மண்டபங்களையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். என்னென்ன தேதியில் என்னென்ன நிகழ்ச்சி நடக்கிறது என்பதை விசாரித்து தெரிந்து கண்காணிக்க வேண்டும்.பிரசாரத்துக்காகவும், பண வினியோகத்துக்காகவும் மகளிர் சுய உதவிக்குழுவை பயன்படுத்துவதாக கடந்த தேர்தலில் புகார் வந்ததால் இந்த தேர்தலில் இப்புகார் வராத அளவுக்கு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
பிரசாரத்துக்கு வரும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு கைமாறாக பணம் அல்லது டோக்கன் வழங்கினால் அது குற்றமாகும்.
எனவே அதை தடுக்க வேண்டும்.பால் போடுபவர் அல்லது பேப்பர் பையன் மூலம் வீடு வீடாக பணம்- பரிசு பொருள் கொடுக்க ஏற்பாடு நடப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள பணத்துடன் கூடுதல் பணம் கொடுத்தால் அதை கண்டறிந்து தடுக்க வேண்டும்.தேர்தல் தினத்திலும், அதற்கு முந்தைய 3 நாட்களிலும் இந்த திட்டத்தின் கீழ் கூலி வழங்கப்படக்கூடாது.
அதற்கேற்ற வகையில் கூலி வழங்கும் தினத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கடிதத்தில் நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment