புலிவேந்தலா தொகுதியில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டி

ஆந்திராவில் புலிவேந்தலா தொகுதியில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டியிடுகிறார். 1ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்தலா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார்.

இந்த தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 2ம் தேதி கடைசி நாள். இதில், ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமியை போட்டியிடும்படி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, புலிவேந்தலா ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரும் 1ம் தேதி அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த தொகுதியில் பிரஜா ராஜ்யம் போட்டியிடாது என அந்த கட்சியின் தலைவர் சிரஞ்சீவி ஏற்கனவே அறிவித்துள்ளார். காங்கிரஸ் கேட்டுக் கொண்டால் போட்டியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசமும் கூறியுள்ளது.
ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய மக்களவை சபாநாயகர் பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியான அமலாபுரம் மக்களவை தொகுதியில் பாலயோகியின் மனைவி போட்டியிட்டபோது, தெலுங்கு தேசம் கேட்டுக் கொண்டதால் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: