சீமான் சென்னை திரும்பினார்

மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவாக நேற்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் நேற்று மாவீரர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக டைரக்டர் சீமான் கனடா சென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் சட்ட விரோதமாக பேசியதாக கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். அவரை குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். இன்று அதிகாலை டைரக்டர் சீமான் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பிரபாகரன் படத்துடன் திரண்டனர். அவர்கள் ஈழத்துக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர்.


பிரபாகரனுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் டைரக்டர் சீமான் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன். கனடா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நான் தங்கி இருந்தபோது அந்த நாட்டு போலீசார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும் மாவீரர் தின கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்றும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: