அதிக மாணவர்களை ஏற்றினால் உரிமம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படவேண்டுமென்று பலமுறை அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 2006ஆம் ஆண்டு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு தொடர்ந்து, அனைத்து பள்ளி வாகனங்கள் மேற்கண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மேற்கண்ட அறிவுரைகளுக்கு மாறாக, சில பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தபடி உள்ளது. இத்தகைய செயல், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிராக இருப்பதுடன் விபத்துகள் நடக்க வழிவகை செய்கிறது.
எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகை வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வாகனத்தை கையகப்படுத்தி அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகள் தமக்கென்று சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்ளாமல், தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும்போது நல்ல திறமையான ஓட்டுனர்களை நியமித்து அவற்றை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை முறையாக தினசரி சோதனை செய்ய வேண்டுமென்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று மச்சேந்திரநாதன் தெரிவித்துள்ளார்.
பல லட்சம் விரயம்
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு ஆம்புலன்சிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆறு ஷெட் கட்டப்பட்டும் திறக்கப்படாத நிலையில், அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. மாவட்ட சுகாதார திட்டத்தின் கீழ் மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்த ஆறு ஷெட்கள் கட்டப்பட்டு பல மாதங்களாகி விட்டன.இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. மருத்துவமனையில் அடிப்படை தேவைகள் எத்தனையோ நிலுவையில் உள்ளபோது, அவசரமாக ஆம்புலன்ஸ் நிறுத்த பல லட்சம் மதிப்பில் கட்டடத்தையும் கட்டி உள்ளனர். ஏற்கனவே இங்கு பல லட்சம் மதிப்பில் உலர் சலவை நிலையம் ஏற்படுத்தி அதற்கு விடை தெரியாத நிலையில், இருக்கும் ஒரு ஆம்புலன்சுக்காக ஆறு ஷெட் தேவைதானா? இந்த ஆம்புலன்சோ இரவு பகலமாக மழை, வெயிலில் நிற்கும் அவலம் தொடர்கிறது. இதையாவாது கட்டப்பட்ட ஷெட்டில் நிறுத்த வழிச்செய்யலாமே . வெளி நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்காக கட்டப்பட்ட பொது கழிப்பறையும் கட்டி பல மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதுவும் சில மாதங்களில் சேதம் ஏற்பட்டு இதற்காக இன்னும் பல லட்சம் வீணடிக்கும் நிலை ஏற்படலாம். நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு விடுதி, ஐ.சி. வார்டு போன்று சில வார்டுகளில் சுவர்கள் பெயர்ந்து உள்ள நிலையில் இதில் அக்கறை காட்டாமல், ஆம்புலன்சிற்கு ஆறு ஷெட் கட்டி அரசு பணத்தை வீணடித்துள்ளனர். மாவட்டசுகாதார திட்ட பொறுப்பாளர் டாக்டர் மலையரசிடம் கேட்டபோது, "" மருத்துவமனையில் இன்னும் பல கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் முடிந்தும் டிசம்பரில் ஒப்படைக்கும் போது ஆம்புலன்ஸ் ஷெட் திறக்கப்படும். பொது கழிப்பறை கட்டடத்தை தனியார் நடத்த டெண்டர் விடுவதற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
24 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு இலவச கண்ணாடி
சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை குழுமம், விழித்திரை சம்பந்தப்பட்ட அனைத்து கண் நோய்களுக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர் அகர்வால் ரெடினா பவுண்டேஷன் என்ற பெயரில் அதிநவீன கண் மருத்துவமனையை கோபாலபுரத்தில் அமைத்துள்ளது.
ரூ.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பேசுகையில், சென்னையில் கடந்த 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகர்வால் கண் மருத்துவமனை கடந்த 52 ஆண்டுகளாக கண் மருத்துவத்தில் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. உலகத்தரமான கண் மருத்துவமனைகளில் ஒன்றாக இது திகழ்ந்து வருவது நமக்கு பெருமை ஆகும். கண் மருத்துவ துறையில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் இந்தியாவில் அகர்வால் மருத்துவமனை முன்னோடியாக விளங்குகிறது.
முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்து வரும் ஆட்சியில் பள்ளி சிறார்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் கண்ணொளி பாதுகாப்பு திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 24 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்து, ரூ.5 கோடியே 35 லட்சம் செலவில் இலவச கண்ணாடி வழங்கப்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அவரது 49-வது பிறந்தநாளையொட்டி ஏழை-எளியவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கலைஞர் - ராணுவ அதிகாரி சிறப்பு சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியை, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களுக்கான தென்பிராந்திய ராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் நிதின் கோஹ்லி இன்று சந்தித்துப் பேசினார்.பின்னர், அங்கிருந்த நிருபர்களிடம் நிதின் கோஹ்லி, தமிழகத்துக்கு புதியவன் என்ற முறையிலும், மரியாதை நிமித்தமாகவும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன்.
மாநிலத்துக்கு ராணுவ உதவிகள் தேவைப்பட்டால் அதைச் செய்ய தயாராக இருக்கிறோம் என்று உறுதி அளித்தேன்’’ என்று குறிப்பிட்டார்