இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் துபாய் செல்வது குறைகிறது

இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்களின் வரத்து குறைந்து வருவதாக துபாயைச் சேர்ந்த பிரபல தோரியா சர்வதேச வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவிலிருந்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தோரியா சர்வதேச வேலைவாய்ப்பு மையம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து பல்வேறு நிறுவனங்களில் அமர்த்தும் பணியைச் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மாதத்திற்கு 200 முதல் 4000 இந்தியத் தொழிலாளர்கள் வரை வேலைக்கு வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இது அடியோடு குறைந்து விட்டது. இந்த காலகட்டத்தில் இதுவரை வெறும் நான்கு கட்டுமானத் தொழிலாளர்கள்தான் இந்தியாவிலிருந்து வேலைக்கு அழைத்து வந்துள்ளோம்.

முதலில் மாதத்திற்கு 100 பேராக குறைந்து இப்போது மிகவும் மோசமான முறையில் குறைந்து விட்டது என்றார்.

தோரியா மையம், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய கட்டுமானத் தொழிலாளர்களை துபாயில் வேலைக்கு அமர்த்தும் பணியைச் செய்து வருகிறது. துபாய் [^] பெஸ்டிவல் சிட்டி, ஸ்கை துபாய், துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனம் வேலைக்குத் தேவையான ஆட்களை கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் இந்த நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளர்களிடமிருந்து மூன்று மாத சம்பளத்தை சேவைக் கட்டணமாக இது வசூலிக்கிறது. 3 ஆண்டு ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்களை இந்த நிறுவனம் அமர்த்துகிறது.

இந்த நிறுவனம் மூலம் வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் 3 ஆண்டு காலத்தை முழுமையாக கழித்த பின்னர்தான் நாடு திரும்புவார்களாம். ஆனால் தற்போது துபாய் கட்டுமான சந்தையில் பெரும் நிதித் தேக்கம் காணப்படுவதால் பலர் முன்கூட்டியே ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்கிறார்களாம்.

கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற துபாய் கட்டுமான நிறுவனத்திற்காக 300 பேரை இந்த நிறுவனம் அமர்த்தியது. அவர்களில் 200 பேர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டனராம்.

இருப்பினும் சவூதியில் இன்னும் இந்தியத் தொழிலாளர்களுக்கு நல்ல மவுசு இருப்பதாகவும், அங்கு எந்தவிதக் குறைவும் இன்றி இந்தியத் தொழிலாளர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் தோரியா செய்தித் தொடர்பாளர்.

அடுத்த ஆறு வாரங்களில் தொடங்கவுள்ள ஒரு புதிய கட்டுமானப் பணிக்காக 15000 இந்தியத் தொழிலாளர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்து கொடுக்கவுள்ளதாம்.

0 comments: