இந்தியா, இந்தியர்கள் இல்லாமல் இங்கிலாந்து இல்லை

இந்தியா, இந்தியர்கள் இல்லாத இங்கிலாந்தை நினைத்துப் பார்க்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் 60வது குடியரசு தினத்தையொட்டி அவர் ஆசியன் லைட் என்ற இதழில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் பிரவுன் கூறியிருப்பதாவது...

இந்தியாவுடனான சிறந்த உறவும், இந்திய சமுதாயத்தின் அபாரமான பங்களிப்பையும் எடுத்து விட்டால் இங்கிலாந்து ஒன்றுமே இல்லை. இப்போதுள்ள இங்கிலாந்தாக அது இருக்காது.

இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உறவுகள், 21வது நூற்றாண்டில் சம பங்காளர்கள் என்ற அளவுக்கு மேம்பட்டுள்ளது.

முன்பை விட இரு நாடுகளும் மிகுந்த நட்புடனும், வர்த்தக உறவுகளுடனும் திகழ்கின்றன. இந்தியாவின் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதில் இங்கிலாந்து பெருமைப்படுகிறது.

இந்த ஆண்டு இந்திய அரசியல் சாசனச் சட்டம் இயற்றப்பட்டதன் 60வது ஆண்டு தினம் என்பதும் இந்தியாவுக்கு பெருமிதமான ஒன்றாகும்.

இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்தியா, குடியரசு நாடாக மலர்ந்த தினம் இது. மிகப் பெரிய அளவிலான மாற்றத்தையும், அபாரமான வளர்ச்சியையும் இந்தியா அடைந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. உலக அளவில் முக்கிய பங்குதாரராகவும் இந்தியா மாறியிருப்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும் ஒன்றாகும்.

இங்கிலாந்து சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் இந்தியர்களின் அபாரமான உழைப்பு மற்றும் பங்களிப்பால் மெருகேறி மேம்பட்டுள்ளன. இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் ஆற்றியுள்ள சேவை மறக்க முடியாததாகும்.

நவீன இங்கிலாந்தில் இந்தியர்களும் ஒரு முக்கிய அங்கம் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பிரவுன்.

0 comments: