சானியா திருமணம் ரத்து

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தனது குடும்ப நண்பர் சோரப்புடன் நடக்கவிருந்த திருமணத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.
ஐதராபாத்தை சேர்ந்த சானியா குடும்பத்தாரும், அதே பகுதியை சேர்ந்த சோரப் குடும்பத்தாரும் பல ஆண்டுகளாக பழகி வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி, இரு வீட்டாரின் ஒப்புதலுடன் சானியா & சோரப் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் விமரிசையாக நடந்தது.
பி.காம் பட்டதாரியான சோரப், தற்போது இங்கிலாந்தில் எம்பிஏ படித்து வருகிறார். ‘படிப்பு முடிந்தவுடன் திருமணம், சானியா தொடர்ந்து டென்னிஸ் ஆட தடையில்லை’ என்று அவர் அறிவித்திருந்தார்.

திருமணத்துக்குப் பிறகு விளையாட மாட்டேன் என சமீபத்தில் சானியாவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சோரப்புடனான திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சானியா திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தோம். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு எங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்துப்போகவில்லை.

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளேன். சோரப்புக்கு நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்’ என்றார்.
சானியாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து பத்திரிகையாளர்களுக்கு நேற்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

0 comments: