அலுவலகங்களுக்கு ஒரு வாரம் லீவு… செலவைக் குறைக்க யாஹூவின் புதுமுயற்சி!

வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை உலகெங்கும் உள்ள தங்களின் அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை அளிக்க யாஹூ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்புதான் 700 பேரை பணிநீக்கம் செய்த யாஹூ, தற்போது செலவு குறைப்பு நடவடிக்கையாக இந்த விடுமுறை திட்டத்தை அறிவித்துள்ளது.

அத்தியாவசியமான பணிகள் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்கு நிறுத்திவைக்கப்பட உள்ளது.


சர்வதேச பொருளாதார நிலை நெருக்கடியை சந்திக்கும் சமயங்களில் பாதிப்பில் இருந்து தப்ப, யாஹூ மேற்கொண்டிருக்கும் பல்வேறு முன்னெச்சரிக்கை, செலவு குறைப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளில் ஒரு பகுதியே இந்த கட்டாய விடுமுறை திட்டம்.

யாஹூ மட்டுமல்லாது, அடோப், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களும் டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை கட்டாய விடுப்பு அறிவித்துள்ளன.


‘மந்தமான சமயங்களில் அலுவலகத்தை மூடி, பணியாளர்களையும் சுதந்திரமாக விடுவதன் மூலம், அலுவலக நடைமுறை செலவுகள் குறைவதோடு, பணியாளர்களை ரீ-சார்ஜ் செய்தது போலவும் ஆகும்’ என்று யாஹூ செய்தித் தொடர்பாளர் டானா லெங்கீக் விளக்கம் தந்துள்ளார்.
இந்த ஒரு வார கால விடுமுறையை அமெரிக்காவில் உள்ள யாஹூ பணியாளர்கள் வரவேற்றுள்ளனர்.


தங்களின் சம்பளமில்லா விடுமுறை நாள்களை கழித்துக் கொள்ள இது உதவும் என்றும், நடைமுறையில் நிறுவனத்துக்கும் செலவு கணிசமாக குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments: