கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 21 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

ோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் 43 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான அப்பீல் வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சி தலைவர் அத்வானி 14.2.1998 ல் தேர்தல் பிரசாரத்துக்காக கோவை வந்தார். மாலை 4 மணியளவில் ஒரே சமயத்தில் 17 இடங்களில் தொடர் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் பலியானார்கள். 200 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள்.

இதுதொடர்பான வழக்கை கோவை சிறப்பு கோர்ட்டு விசாரணை செய்தது. அல் உம்மா இயக்கத்தலைவர் பாட்சா உள்பட 43 பேருக்கு அக்கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதுதவிர, 64 பேருக்கு 3 ஆண்டு முதல் 13 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 2007 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆயுள் தண்டனையை எதிர்த்து 43 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.


இந்த வழக்கில் கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி உள்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குண்டு வெடிப்பில் மரணம் அடைந்த ஒருவரின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சம்பவம் நடந்தபோது மைனர்களாக இருந்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முஜ்புர் ரகுமான், முகமது அம்ஜத் அலி ஆகியோரை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.


மற்றவர்களின் அப்பீல் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ந் தேதி தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் 39 பேரில் 16 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. 21 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் ரத்து செய்யப்பட்டது.


மேலும் மதானி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

0 comments: