ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பைவிட்டு நின்றவர் இன்று ஐ.ஏ.எஸ்

ஆறாம் வகுப்போடு பள்ளிப் படிப்பைவிட்டு நின்றவர் இன்று ஐ.ஏ.எஸ். ஆகி இருக்கிறார் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகணும்.
இன்று இந்திய வருவாய்த் துறையில் டெபுடி கமிஷனராக வலம் வரும் நந்தகுமாரின் இந்த வெற்றிப் பந்திற்குப் பின்னால் பல சோகக் கதைகள் சுழன்று கொண்டிருக்கின்றன.``வீட்ல வறுமை. தொடர்ந்து படிக்க வசதியில்லை.

குடும்பத்தில் மூத்தப் பிள்ளையான என்னை இனிமே படிக்க வேண்டாம்னு நிறுத்திட்டாங்க. மெக்கானிக் ஷாப், லாட்டரி சீட்டை சேல்ஸ் பண்ற பையன்னு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். மெக்கானிக் ஷாப்ல கிரீஸ் டப்பாவும் கையுமா நிற்கும்போதுகூட படிச்ச பசங்களே முகம் சுளிச்சுகிட்டு போகும்போது மனசுக்குள்ள ரணமா வலிக்கும்'' என்று சொல்லும்போது நந்தகுமாரின் குரல் கொஞ்சம் உடைகிறது.``எட்டாம் கிளாஸை பிரைவேட்டா எழுதி ஜெயித்தேன். அப்படியே பத்தாம் வகுப்பையும் தொட்டாச்சு.

பாஸான தெம்போட ஸ்கூல்ல ரெகுலரா ப்ளஸ் ஒன் படிக்கலாம்னு போய் சீட் கேட்டா `சரிப்பட்டு வராது'னு உதாசீனப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஃபர்ஸ்ட் குரூப் கேட்டா கெடைக்கல.

சரி, வர்றத வச்சு வாழ்ந்து காட்டுவோம்னு முடிவெடுத்து படிக்க ஆரம்பிச்சேன்.பிரைவேட்டா படிச்சதால காலேஜுலயும் சீட் கிடைக்கல. போனாபோகட்டுமேன்னு அம்பேத்கர் காலேஜுல இங்கிலீஷ் லிட்ரேச்சர் கொடுத்தாங்க. தமிழே சரியா வராத எனக்கு ஆங்கிலம் எப்படி வரும்? படிக்குறது ஒண்ணு. எழுதுறது ஒண்ணுனு இருக்குறப்பதான் எனக்கு டிஸ்லெக்ஸியா என்ற கற்றலில் குறைபாடு நோய் இருக்குறதைப் புரிஞ்சுகிட்டேன்.

அதையும் மீறி கல்லூரி முடித்ததும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆசைப்பட்டேன். அதற்கான அகாடெமிகளின் வாசல் வரை சென்றேன். அவர்கள் வைத்த தேர்வில் வெற்றி பெற்றும்கூட எனக்குப் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் உடைந்து போகவில்லை. ``அகாடெமியில் சேராமலேயே ஐ.ஏ.எஸ். எழுதலாம்'' என்ற என் நண்பன் ஷ்ரீதரனின் வழிகாட்டலோட வெளியில் இருந்தே ஐ.ஏ.எஸ். எழுதினேன். இந்தியாவிலேயே புவியியல் பாடத்தில் முதல் மாணவனாக வெற்றியும் பெற்றேன்'' என்கிறார் நந்தகுமார்.

0 comments: