அன்புமணி ராமதாஸுக்கு அனுமதி மறுப்பு

பென்னாகரம் தொகுதிக்குள் நுழைய முயன்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று கிருஷ்ணகிரியில் வன்னியர் சங்க மாநாடு நடைபெறுகிறது. இதில் கல்ந்துகொள்வதற்காக அன்புமணி நேற்று தர்மபுரி வந்தார்.
இந்நிலையில், தர்மபுரியிலிருந்து நேற்று இரவு அவர் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள பென்னாகரம் தொகுதிக்குக் கிளம்பினார்.இதனிடையே தொகுதிக்குள் அனுமதி இல்லாமல் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதைக் கண்காணிப்பதற்காக கெட்டூர் கிராமத்தில் காவலர்கள் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அன்புமணியின் கார், அங்கு வந்தபோது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் அதிகாரியின் அனுமதி பெறாத காரை அனுமதிக்க இயலாது என்று கூறி தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்லக்கூடாது என்று காவலர்கள் தெரிவித்தனர்.அப்போது அங்கிருந்த தாசில்தார் டியூக் பொன்ராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன், அன்புமணியுடன் வந்த பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கல் வீச்சிலும் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், தகவலறிந்ததும் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. சுதாகர், உதவி கலெக்டர் மணிவண்ணன் ஆகியோர் கெட்டூருக்கு விரைந்து சென்று பாமகவினரை அமைதிப்படுத்தினார்கள்.

தொகுதிக்குள் டாக்டர் அன்புமணி கார் செல்ல அனுமதி கேட்டு கடிதம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் காலையில் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் ஆகவே அனுமதிக்க வேண்டும் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அன்புமணி தொகுதிக்குள் காரில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பாமகவினர் கலைந்து சென்றனர்.

0 comments: