ஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகை

நெல்லைக்கு ரயில்வே குறித்த அரிய ஸ்டாம்புகள் இடம் பெற்ற கண்காட்சி ரயில் இன்று (17ம்தேதி) வருகிறது. கண்காட்சி ரயிலை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.இந்திய ரயில்வே 55வது ரயில்வே வாரவிழாவின் ஒருபகுதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ஸ்டாம்ப் கண்காட்சி ரயிலை இயக்குகிறது. இந்த ரயில் கடந்த 13ம்தேதி சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் க்ருஷனால் துவக்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு வட்ட முதன்மை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் சாந்திநாயர் சிறப்பு தபால்கவர் வெளியிட்டார்.

கண்காட்சி ரயில் 3 கோச்களை கொண்டது. கிழக்கு ரயில்வேயில் பணியாற்றும் அலுவலர் முகமதுமுஜிபுல்லா சேகரித்த அரிய வகை தபால் ஸ்டாம்ப்கள், கவர்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ரயில்வே துறையின் வளர்ச்சியை குறிப்பிடும் வகையில் ரயில்பாதை, குதிரைகள் இழுக்கும் ரயில் இன்ஜின், நீராவி இன்ஜின் அறிமுகம், மெட்ரோ ரயில்கள், மோனோ ரயில்கள், சூப்பர் ஸ்பீடு ரயில்கள், ரோலிங் ஸ்டாக்ஸ், ஸ்டேஷன்கள், சிக்னல்கள், பாலங்கள், தண்டவாளங்கள், மலைவழிப்பாதை, மெயில் ரயில்கள், ரயில்வே மெயில் சர்வீஸ் தொடர்பான ஏராளமான ஸ்டாம்ப்கள், கவர்கள் ரயிலில் இடம் பெற்றுள்ளன.

இன்று நெல்லை வருகை:ஸ்டாம்ப் கண்காட்சி ரயில் இன்று நெல்லை வருகிறது. நெல்லை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டிருக்கும். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை துவக்கிவைக்கிறார். அனுமதி இலவசம். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்காட்சி ரயிலை பார்வையிட்டு பயன் பெற வேண்டும் என கோட்ட ரயில்வே மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments: