திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் 'பந்த்':பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 189 பேரும், ரயில் மறியலில் ஈடுபட்ட 275 பேரும் கைது செய்யப்பட்டனர்.


திருவாரூரில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.காமராஜ், நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, மா.கம்யூ. மாவட்ட செயலாளர் நாகராஜன், இந்திய கம்யூ. சார்பில் மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வை.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 126 பெண்கள் உட்பட 262 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் ரயில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் திருவாரூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.


ஒருசில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதேபோல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், நன்னிலம் உட்பட அனைத்துபகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மன்னார்குடி அருகே சவளக்காரன், கோட்டூர், பெருகவாழ்ந்தான், தட்டாங்கோவில், திருமக்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் சாலைமறியல் நடந்தது. மேலும் திருத்துறைப்பூண்டி பகுதியில் ரயில் மறியல் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட், நெடும்பலம், கட்டிமேடு, பாமணி, வேளூர், மணலி, ஆலத்தம்பாடி உட்பட பல இடங்களில் சாலைமறியல் நடந்தது.


நீடாமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் பஸ் மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த பொது வேலை நிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரடாச்சேரி, முகந்தனூர், அம்மையப்பனில் சாலைமறியல் செய்த 220 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொரடாச்சேரி ரயில்வே ஸ்டேஷனில் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். நாகை: நாகை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள் சார்பில் ரயில் மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.


நாகை ரயில்வே ஸ்டேஷனில் மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் முருகையன், இந்திய கம்யூ., மாவட்ட நிர்வாகக்குழு செல்வம் ஆகியோர் தலைமையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 175 பேரை இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் நாகைமாலி, இந்திய கம்யூ., வட்ட செயலாளர் இடும்பையன் ஆகியோர் தலைமையில் ரயில் ஈடுபட்ட 125 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டத்தில் அரசு பஸ்கள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோவில் பகுதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் வழக்கம்போல் இயங்கின. மணல்மேடு, இளந்தோப்பு, பட்டவர்த்தி, கடலங்குடி, சீர்காழி, பொறையார், திருமருகல், கொள்ளிடம் உட்பட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டிருந்தன. மேலும் வேதாரண்யத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.


காரைக்கால்: காரைக்கால் நகரில் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்களும் இயங்கவில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. காரைக்காலில் உள்ள 2 திரையரங்குகளில் காலை மற்றும் மதியக் காட்சிகள் ஓடவில்லை.மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின. திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உட்பட கொம்யூன் பகுதிகளிலும் 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கியமான இடங்களில் ஒரு சில மருந்துக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன. தமிழகம், புதுச்சேரி அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. காரைக்கால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் நடத்த முயன்ற 213 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். காரைக்கால் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே புளியங்கொட்டை சாலையில் சென்னை சென்ற தமிழக அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

0 comments: