சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் பிரபாகரன் தாயார்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 16ம் தேதி இரவு 10.45 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

பக்கவாத நோய்க்கு சிகிச்சை எடுக்க கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு வந்த அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார்கள் குடியுரிமை அதிகாரிகள். இந்தியாவுக்குள் நுழைவதற்கான உரிமை உங்களிடம் இல்லை என பார்வதி அம்மாளையும் அவருக்கு துணையாக வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணையும் தடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

மருத்துவ சிகிச்சைக்காகவே தான் சென்னை வந்திருப்பதாக பார்வதி அம்மாள் அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டதோடு அவர் மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். தகவல் அறிந்து வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் சென்னை விமான நிலையம் சென்றனர். ஆனால் அவர்களுக்கும் பார்வதி அம்மாளைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.

0 comments: