ஆஸி.,யில் 4 கல்லூரிகள் மூடல் : 300 இந்திய மாணவர்கள் பாதிப்பு

ஆஸ்திரேலியாவில் நான்கு தனியார் கல்லூரிகள் மூடப்பட்டதால் 300க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தரமான கல்வி, கல்வியை முடித்த உடன் வேலை வாய்ப்பு என்ற காரணத்தால், ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் அந்நாட்டில் படிக்கின்றனர். ஆனால், இதை பயன்படுத்தி சில மோசடி கல்லூரிகள் கவர்ச்சி விளம்பரத்தை காட்டி மாணவர்களை சேர்த்த பின், சில காரணங்களால் திடீரென மூடி விடுகின்றன. இதனால், ஏராளமான இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், குளோபல் கேம்பஸ் மேனேஜ்மென்ட் குழுமத்தால் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களில் நடத்தப்பட்ட நான்கு கல்லூரிகள், போதிய நிதியின்மையால் மூடப்பட்டு விட்டன. இந்த கல்லூரிகளில் படித்து வந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 300க்கும் அதிகமான இந்திய மாணவர்களும் அடக்கம். இது குறித்து இந்திய தூதர் வி.கே.சர்மா குறிப்பிடுகையில், "பெருகிவரும் தனியார் கல்லூரிகளில் சில போலி கல்லூரிகளும் உள்ளன. இவற்றை கட்டுப்படுத்த ஆஸ்திரேலிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 comments: