திமுகவுக்கு ஆதரவு?

நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சரத்குமார் வரும் 27ல் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமையில் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவதா அல்லது மற்ற கட்சியுடன் கூட்டணி சேர்வதா அல்லது மற்ற கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது பற்றி விரிவாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தனித்து போட்டியிடலாம் என்று சரத்குமாரை கட்சியினர் சிலர் கேட்டுக்கொண்டதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று பெரும்பாலானோர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அனைவருடைய கருத்துக்களை கேட்ட சரத்குமார் இது பற்றி வரும் 27ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் மாநில நிர்வாகிகளுடன் மீண்டும் கலந்து பேசி இது பற்றிய முடிவை அறிவிப்பதாக கூறினார். அதன்படி நாளை மறுநாள் கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் நடக்கிறது.

இக் கூட்டத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி முழு ஆதரவை அளிக்கும் என்ற அறிவிப்பை கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிடுவார் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: