நடிகர் குணாலை கொன்றது எப்படி?

நடிகர் குணால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகையின் மீது சந்தேகம் அதிகமாகி இருக்கிறது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘காதலர் தினம்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் குணால் சிங். திருமணமான இவர், மனைவியை பிரிந்து மும்பை புறநகரில் அந்தேரி வர்சோவாவில் வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை முடித்தனர்.


ஆனால், தனது மகன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக குணாலின் தந்தை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘குணாலின் கழுத்து, கைகளில் காயங்கள் இருந்தன. அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கின்றனர். எனவே, எனது மகனின் சாவு குறித்து மறு விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி வர்சோவா காவல் நிலைய போலீசாருக்கு கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், குணால் தற்கொலை செய்த தினத்தன்று அவருடைய வீட்டில் இருந்த நடிகை லவீனா பாட்டியாவை கடந்த ஞாயிறன்று திடீரென கைது செய்தனர்.


அவரை 28ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் லவீனா ஆரம்பத்தில் இருந்தே பொய் தகவல்களை கூறி வந்திருப்பது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. பாலிவுட்டில் அதிகம் பிரபலம் இல்லாத லவீனா, ‘யோகி’ என்ற போஜ்புரி படத்தில் குணாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


அப்போது நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் பிறகே குணால் தனது மனைவியை பிரிந்துள்ளார். எனவே, லவீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: