கலைவாணர் அரங்கம் இடிக்கப்படுகிறது

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு புதிய அரங்கம் கட்டப்படவுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் முதல் அங்கு நிகழ்ச்சிகள் நடத்த முடியாது.கலைவாணர் அரங்கம் கடந்த 1954-ம் ஆண்டில் சில காலம் சட்டப் பேரவைக் கூட்ட அரங்கமாக செயல்பட்டது.

பின்னர், 1957-ல் அந்த அரங்கத்துக்கு பாலர் அரங்கம் என்று அப்போதைய பிரதமர் நேரு பெயர் சூட்டினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், அவர்கள் தொடர்பான தரமான திரைப்படங்கள் அங்கு திரையிடப்பட்டன.இதன்பின், பாலர் அரங்கம் என்பது கலைவாணர் அரங்கமாக மாறியது. 1974-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி, இந்த அரங்கத்துக்கு பெயரை மாற்றி அதை திறந்து வைத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.மிகக் குறைந்த வாடகையில் பொது மக்கள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும் வகையில் அந்த அரங்கம் அமைந்திருந்தது.


இப்போதும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் கலைவாணர் அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது, அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் கலைவாணர் அரங்கத்தை இடிக்கவுள்ளனர்.கலைவாணர் அரங்கத்தை இடிக்கப்படவுள்ளதால் அடுத்த மாதம் முதல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நவம்பர் மாதத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும். தூய்மை, ஒலி பெருக்கிப் பணி போன்றவற்றுக்காக கலைவாணர் அரங்கத்தில் 16 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


அவர்கள் அனைவரும் வேறு இடங்களில் பணி அமர்த்தப்படுவர். கலைவாணர் அரங்கத்துக்கான அலுவலகமும் தாற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.புதிதாக கட்டப்படவுள்ள அரங்கத்தில், 3000 இருக்கைகள் கொண்டதாக அமையும் எனத் தெரிகிறது. அதுதொடர்பான மாதிரிப் படங்கள், மதிப்பீடு உள்ளிட்டவை முதல்வரின் ஒப்புதலுக்குப் பின்னர் இறுதி செய்யப்படும்.இந்தப் புதிய அரங்கம், தற்போது அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு எதிரே வரவுள்ளதாம்.கலைவாணர் அரங்கத்தையொட்டி மாநில செய்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இது, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் இல்லத்தின் முதல் தளத்துக்கு மாற்றப்படவுள்ளது.ஆனால் அலுவலகத்தை மாற்ற டிசம்பர் 10ம் தேதி வரை மாநில செய்தி நிலையப் பிரிவினர் டைம் கேட்டுள்ளனராம்.

0 comments: