காரில் எடுத்து வந்த வங்கி பணம் ரூ.ஒரு கோடி 'லபக்': புதுச்சேரி டிராவல்ஸ் கார் டிரைவருக்கு போலீஸ் வலை

ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியின், புதுச்சேரி கிளையில் இருந்து, சென்னையில் உள்ள வங்கியின் தலைமையகத்திற்கு கார் மூலம் எடுத்து வந்த ஒரு கோடி ரூபாயை நூதன முறையில் கொள்ளையடித்த டிராவல்ஸ் கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் என்ற வங்கியின் கிளை புதுச்சேரியில் உள்ளது. இங்கு, கடப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (32), புதுச்சேரி மணக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி (52) ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்கள் இருவரிடமும் வங்கிப் பணம் ஒரு கோடி ரூபாயை கொடுத்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் தலைமையகத்தில் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப் பட்டது. அதன்படி, நேற்று காலை புதுச் சேரியில் உள்ள பாலா டிராவல்சில் ஒரு காரை வாடகைக்கு எடுத்தனர். வங்கி ஊழியர்கள் முருகனும், பக்கிரியும் ஒரு கோடி ரூபாயை ஒரு சூட் கேசில் வைத்து எடுத்துக் கொண்டு காரில் ஏறி சென்னை புறப்பட் டனர். காரை டிரைவர் முத்துக்குமார் என்பவர் ஓட்டி வந்தார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.


பனையூர் போலீஸ் சோதனை சாவடி அருகே 'ஸ்பீட் பிரேக்' மீது கார் ஏறி இறங்கியதும் திடீரென இன்ஜின் 'ஆப்' ஆகிவிட்டது. காரை 'ஸ்டார்ட்' செய்ய டிரைவர் முத்துக் குமார் முயன்றார். ஆனால், கார் ஸ்டார்ட் ஆகவில்லை.
'கீழே இறங்கி தள்ளிவிடுங்கள். கார் ஸ்டார்ட் ஆகிவிடும்' என, காரில் அமர்ந்திருந்த வங்கி ஊழியர்கள் முருகன் மற்றும் பக்கிரியிடம் டிரைவர் முத்துக்குமார் கூறினார். இதைத் தொடர்ந்து, முருகன் மட்டும் இறங்கி காரை தள்ளினார். அப்படியும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. அப்போது, 'நீங்கள் இருவரும் ஒன்றுசேர தள்ளுங்கள்; அப்போது தான் கார் ஸ்டார்ட் ஆகும்' என்றார் முத்துக்குமார். இதையடுத்து, ஒரு கோடி ரூபாய் பணமுள்ள சூட்கேசை காரிலேயே வைத்துவிட்டு, முருகனுடன் சேர்ந்து காரை தள்ள, பக்கிரியும் இறங்கினார்.


இருவரும் சேர்ந்து காரை தள்ளியதும், கார், 'ஸ்டார்ட்' ஆகி, வேகமாக ஓடத் துவங் கியது. முருகனும், பக்கிரியும் காரை பின்தொடர்ந்து ஓடினர். ஆனால், கார் மின்னல் வேகத்தில் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் மாயமானது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் முருகனும், பக்கிரியும் ஆட்டோ மூலம் காரை பின் தொடர்ந்தனர். நீண்ட தூரம் விரட்டிச் சென்றும், பணத்துடன் சென்ற கார் எங்கு போனது என கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினர். பின், பனையூர் போலீஸ் சோதனை சாவடியில், பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர். இதையடுத்து, நீலாங்கரை உதவி கமிஷனர் முரளி தலைமையில், போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டது. ஒரு கோடி ரூபாய் பணத் துடன் மாயமான காரின் எண், உடனடியாக ஒயர்லெஸ் மூலம் அனைத்து போலீஸ் ஸ்டேஷன் கள் மற்றும் செக்போஸ்ட்களுக்கு அறிவிக்கப்பட்டது. பல மணிநேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குபின், டிராவல்ஸ் கார் குறுகிய சந்துகளில் நுழைந்து, மாயமாகியது தெரியவந்தது. பணம் கொள்ளைபோனது குறித்து வங்கி ஊழியர்கள் முருகன், பக்கிரி ஆகியோர் புதுச்சேரியில் உள்ள வங்கி கிளைக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார் மாயமான டிரைவரை தேடி வருகின்றனர். டிரைவரை விரைவில் பிடித்து விடுவோம்:


இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: காலை 11.15 மணிக்கு அக்கரை செக்போஸ்ட் அருகில் தான் காருடன் பணம் கடத்தப்பட்டுள்ளது. அடுத்த 15 நிமிடங்களில் எங்களுக்கு தகவல் தரப்பட்டதால் போக்குவரத்து போலீசார் மூலம் அனைத்து பகுதிகளிலும் செக்போஸ்ட் அமைத்தோம்.


இதனால், டிரைவர் முத்துக்குமார் காரை வேறு எங்கும் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து அவன், சக்திநகர் பகுதியில் வண்டியை நிறுத்திவிட்டு, அதிலிருந்த பணப்பெட்டியில் போடப் பட்டிருந்த சிறிய பூட்டை உடைத்து, 20 லட்சம் ரூபாயை மட்டும், வங்கி கேஷியர் விட்டுச் சென்ற சாப்பாடு வைக்கும் பையில் வைத்து எடுத்துச் சென்றுள்ளான். இதனால், அவன் வேறு எங்கும் செல்லமுடியாது. விரைவில் நாங்கள் பிடித்து விடுவோம். வங்கியில் இருந்து, பணப்பெட்டியை எடுத்து வருபவர்கள் புதுச்சேரி போலீசாரையாவது அழைத்து வந்திருக்கலாம். ஏற்கனவே, இதே டிரைவர் முத்துக் குமார் இவர்களுடன் சென்னைக்கு பணம் கொண்டு வந்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. இன்று கொண்டு வரும் போது, ஏற்கனவே கல்பாக்கத்தில் வாகனத்தை டீ சாப்பிட நிறுத்த முயற்சித்து முடியாமல் போகவே, வாகனம் பழுதானது போன்று பாசாங்கு செய்து கடத்தியுள்ளான். வங்கிகளில் பணம் கொண்டுவரும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து வலியுறுத்தப் படும். இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.


ஒரு கோடி ரூபாய் கார் கண்டுபிடிப்பு : ஒரு கோடி ரூபாயுடன் மாயமான டிராவல்ஸ் கார், துரைப்பாக்கம் காந்திநகரில் அனாதையாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு கோடி ரூபாய் பணம் இருந்த சூட்கேஸ் சிறிய பூட்டு பூட்டியதால் எளிதாக உடைத்து, அதிலிருந்து 20 லட்சம் ரூபாய் மட்டும் கார் டிரைவர் முத்துக்குமார் திருடிக்கொண்டு தலைமறைவானார். மீதி பணம் அப்படியே இருந்ததால் போலீசார் நிம்மதியடைந்தனர்.
அனாதையாகக் கிடந்த காரை மோப்பம் பிடித்த 'தண்டர்' நாய், பிரேக் டவுனான இடம் வரை சென்று நின்றுவிட்டது. கடந்த முறை பணத்தை காரில் சென்னைக்கு எடுத்து வந்தபோது நோட்டமிட்ட முத்துக்குமார், இம்முறை திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

0 comments: