ஸ்பென்சருக்கு எதிராக கடை உரிமையாளர்கள் போராட்டம்

ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் உள்ள கடைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் ஸ்பென்சர் நிர்வாகம் மோசடி செய்வதாக கூறி ஸ்பென்சர் பிளாசாவில் கடை வைத்துள்ளவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர் பிளாசா வணிகவளாகம் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு கடை பரப்பியுள்ளன.

இந்த நிலையில் ஸ்பென்சரின் 2வது பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர். அண்ணாசாலைக்கு திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் உடனடியாக விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தனர்.அங்கு கடை உரிமையாளர்கள் போராட்டம்நடத்தினர். கடை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் காமராஜ் இது குறித்துக் கூறுகையில், தமிழக அரசு எங்களுக்காக வழங்கும் மின்சாரத்தை எங்களுக்குத் தராமல், பன்னாட்டு நிறுவனங்களுக்கே மோசடியாக கொடுத்து வருகிறது ஸ்பென்சர் நிர்வாகம்.
இதனால் எங்களது கடைகளில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படுகிறது. ஏசியைக் கூட போட முடியவில்லை. இதனால் பெருமளவிலான வாடிக்கையாளர்கள் மாறி விட்டனர்.இதனால் எங்களது தொழில் பாதித்துள்ளது. 50 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

இந்தப் போராட்டத்தால் அண்ணா சாலையில் பரபரப்பு நிலவியது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

0 comments: