பிரதமரை 'குரு' என்று அழைத்த ஒபாமா

கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை, அமெரிக்க அதிபர் ஒபாமா, 'குரு' என்று அழைத்ததாக, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கூறியதாவது:இந்தியாவைப் பற்றி மிகச்சரியான உள்ளுணர்வு ஒபாமாவுக்கு இருக்கிறது. கோபன்ஹேகனில் நடந்த பருவநிலை உச்சிமாநாட்டில், 'பேசிக்' நாடுகளான பிரேசில், தென்னாப்ரிக்கா, இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது, ஒபாமா, நம் பிரதமரைப் பார்த்து 'குரு' என்று மூன்று முறை அழைத்தார்.


பேச்சுவார்த்தையின் போது அறைக்குள்ளே நுழைந்த ஒபாமா, மன்மோகன் சிங்கை பார்த்து, 'மிஸ்டர் குரு! நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று கேட்டார்.அந்த மாநாட்டில் இந்தியா, சீனாவுக்கு இடையிலான ஒத்துழைப்பைப் பார்த்து, அமெரிக்கர்கள் சந்தேகம் கொண்டனர். என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர்கள் சிலர், ஏன் சீனாவுடன் இந்தியா ஒத்துழைக்கிறது என்று அடிக்கடி கேட்டனர்.இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் மட்டுமின்றி வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளுடனும் உறவைப் பேணுகிறது. மேலும், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பொதுவான சில பிரச்னைகள் இருக்கின்றன என்று நான் கூறினேன்.இவ்வாறு அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

0 comments: