பெற்ற குழந்தையை வாய்க்காலில் வீசிய கொடூரம்

மகளுக்கு குழந்தை உள்ள நிலையில், மனைவிக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை வாய்க்கால் அருகே உயிருடன் வீசிச்சென்ற தந்தையை போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே மஞ்சக்கொல்லையைச் சேர்ந்தவர் விவசாயி நாகூரான் (45). இவரது மனைவி ராணி (40). இவர்களுக்கு ஏற்கனவே மகள்கள் வனிதா (18), அனுஷியா (14), சரண்யா (12), லாலுபிரசாத் (8) ஆகிய குழந்தைகள் உள்ளன.


இதில், மகள் வனிதாவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், ராணி மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான ராணிக்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. கொரடாச்சேரியில் இருந்து திருவாரூர் வரும் வழியில் ஏற்பட்ட பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராணிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால், திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு நாகூரான் அழைத்துச் சென்றார். அப்போது, "குழந்தை எங்கு உள்ளது?' என மருத்துவமனை ஊழியர்கள் கேட்டனர்.


"குழந்தை இறந்து பிறந்ததாக,' அவரது கணவர் கூறியதாக ராணி தெரிவித்தார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கொரடாச்சேரி போலீஸில் புகார் செய்தனர். நாகூரானை அழைத்து விசாரித்தபோது, ""நான் என் மனைவியை பிரசவத்துக்கு அழைத்து வந்தபோது, சிறுநீர் கழிக்க வேண்டுமென ராணி கூறினார்.


ஒத்தையடி கிராமம் அருகே வாய்க்கால் அருகே அவர் இறங்கியபோது சிறுநீர் கழித்தபோது குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறந்து இறந்துவிட்டதால், அதை வயலில் புதைத்துவிட்டேன்,'' என்றும், முன்னுக்குப்பின் முரணாக அவர் தகவல் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது, ஏற்கனவே எங்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளன. மூத்த மகளுக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.


இந்நிலையில், எங்களுக்கு குழந்தை பிறந்தால், ஊரில் கேலி பேசுவார்கள் என்பதால், அக்குழந்தையை ஊருக்கு அருகே வாய்க்காலில் வீசிவிட்டதாக,'' கூறினார். குழந்தையை வீசிய இடத்தை அடையாளம் காட்டுமாறு நாகூரானை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, ஒத்தையடி என்ற கிராமத்தின் சுடுகாட்டு ஓரத்தில் உள்ள வாய்க்காலில் குழந்தை உயிருடன் கிடந்தது. அதிர்ச்சி அடைந்த போலீஸார், அக்குழந்தையை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரடாச்சேரி போலீஸார் விசாரிக்கின்றனர்.

0 comments: